கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான 114 பேர் நேற்று சீனாவில் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை வரை 2118 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நேற்று புதன்கிழமை 394 பேர் தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்டதாக சீனா தேசிய சுகாதார ஆணையகம்; தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக கண்டறியப்பட்ட புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 1,749 புதிய தொற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நேற்று உயிரிழந்த 114 பேரில் 108 பேர் தொற்றுநோயின் மையமான ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று கண்டறியப்பட்ட 394 புதிய தொற்று நோயாளர்களுடன் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,576 ஆக அதிகரித்துள்ளது.
புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நோயாளிகளை துரிதமாகக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன்மூலம் தொற்று பரம்பலின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.